எல்லையில் பொதுமக்கள் மீது தாக்குதல்! – பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில தினங்களாக தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது,

ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று அதிகாலையில் இந்திய ராணுவ நிலைகள் மீதும், மக்கள் வசிக்கும் வீடுகள் மீதும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதே மாவட்டத்தில் சுந்தர்பானி பகுதியிலும் நேற்று காலை பாகிஸ்தானின் அத்துமீறல் தொடர்ந்தது.

இதேபோல் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகாட்டி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று அதிகாலையில் தொடர் தாக்குதல் நடத்தியது. துப்பாக்கி சூடு, சிறிய ரக பீரங்கி தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த சம்பவங்களில் இந்திய தரப்பில் ஒரு வீரர் காயம் அடைந்தார்.

இந்த நிலையில், இந்திய ராணுவம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறினால், கடும் விளைவுகளை சந்திக்கும் வகையில் பதிலடி கொடுக்கப்படும் எனவும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

“எங்கள் ராணுவத்தால் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் உயிரிழப்பதை தவிர்க்கும் வகையில், மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து விலகி தாக்குதல் நடத்தப்பட்டது” என்றும் இந்திய ராணுவம் கூறியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools