X

ஓய்வின்றி உழைக்க வேண்டும் – தொண்டர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 3 கட்டங்களாக முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதையடுத்து உத்தரபிரதேசம் மாநிலத்தில் வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ள பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக பாஜக தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

தேர்தலின்போது வாக்குச்சாவடிக்குச் செல்லும் தொண்டர்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் . நாம் நேர்மையான கூட்டணி அமைத்துள்ளோம். நாட்டுக்காக எவ்வித சூழலிலும் ஓய்வின்றி உழைக்க வேண்டும். நாடு முழுவதும் நமக்கு ஆதரவான அலை உருவாகியுள்ளது. தேர்தலின் போது அத்துமீறுவது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும்.

நாம் அவ்வழியில் செல்லக்கூடாது. பிரதமர் மோடி தான் மீண்டும் வரவேண்டும் என நாடே ஆசைப்படுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கொண்டாடும் வகையில் ஆட்சி நடைபெறுகிறது. நான் நேற்று ரோட்ஷோ நடத்தியபோது உங்களின் உழைப்பை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

மக்களின் உள்ளங்களை வெல்லும் அளவிற்கு உங்கள் பணி இருக்க வேண்டும். பாஜக எப்போதும் தொண்டர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறது. கேரளா, வங்காளம் ஆகிய மாநிலங்களில் தேர்தலின்போது வன்முறை நடந்தபோதும் உங்களின் ஊக்கம் சற்றும் குறையவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.