Tamilசெய்திகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 பேர் பள்ளிகளில் நேரடியாக தேர்வு எழுதுகிறார்கள். பள்ளிகளில் படிக்காமல் பயிற்சி வகுப்பு மூலம் 21 ஆயிரத்து 875 தனித் தேர்வர்களும், சிறை கைதிகள் 125 பேரும் எழுதுகின்றனர்.

302 மையங்களில் நடைபெறும் பொதுத்தேர்வை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வுக்கு முன்னதாக 9.30 மணிக்கு மையங்களுக்கு மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டார்கள். 10 மணிக்கு விடைத்தாள் வழங்கப்பட்டது.

10.10 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு அதனை மாணவர்கள் சரி பார்த்து படிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது. 10.15 மணிக்கு தேர்வு தொடங்கி பகல் 1.15 மணி வரை நடடைபெறுகிறது. தேர்வு மையங்களுக்கு செல்போன் உள்ளிட்ட மின் சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. முதல் நாளான இன்று தமிழ் பாடத்தேர்வு நடைபெற்றது. மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் தேர்வு எழுதினார்கள்.

தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் வெளியேற்றப்படுவதோடு 3 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகிறார்களா? என கண்காணிக்க 3200 பறக்கும் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேர்வு மைய கண்காணிப்பாளர்களின் தீவிர மேற்பார்வையில் தேர்வு நடைபெற்றது. வினாத்தாள்கள் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு முறையாக தேர்வை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

பொதுத் தேர்வை எவ்வித குழப்பமும் இல்லாமல் நடத்த அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிளஸ்-2 தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் தங்களின் ஆசிரியர், தலைமை ஆசிரியர்களிடம் வாழ்த்தும், ஆசிகளையும் பெற்றனர். அரசு மாநகராட்சி, நகராட்சி, உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் வெளிநபர்கள் யாரையும் தேர்வு நேரத்தில் அனுமதிக்கவில்லை. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் சிறந்த முறையில் தேர்வு எழுத வாழ்த்துக்களை தெரிவித்து அனுப்பினர்.

சென்னை மாவட்டத்தில் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இத்தேர்வு வருகிற 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. 5-ந்தேதி ஆங்கில தேர்வு நடக்கிறது. ஒவ்வொரு தேர்விற்கும் போதிய இடைவெளி விடப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் தேர்விற்கு எளிதாக ஆயத்தமாக முடியும்.