Tamilசெய்திகள்

பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டின் 25 மணி நேர கவுண்டன் நாளை தொடங்குகிறது

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜனவரி 1-ந்தேதி காலை 9.10 மணி அளவில் பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைகோள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் விண்வெளியில் உள்ள தூசுகள் மற்றும் கருந்துளை மேக கூட்டங்களை ஆய்வு செய்ய இருக்கிறது.

அத்துடன் திருவனந்தபுரம் லால் பகதூர் சாஸ்திரி பல்கலைக்கழக மாணவிகள், பூமியின் மேல் பரப்பில் உள்ள புற ஊதா கதிர்கள் மற்றும் கேரள மாநிலத்தின் தட்பவெப்ப நிலை அறிந்து கொள்வதற்காக வெசாட் என்ற செயற்கைகோளை வடிவமைத்திருந்தனர்.

இந்த செயற்கைகோளுடன், வெளிநாட்டு செயற்கைகோள்கள் சிலவற்றையும் இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இதற்கான இறுதி கட்டப் பணியான 25 மணி நேர கவுண்டவுன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.10 மணிக்கு தொடங்குகிறது. ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், செயற்கைகோள் செயல்பாடு மற்றும் ராக்கெட் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாக இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் கூறினர்.