Tamilசெய்திகள்

15 ஆம் தேதி சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கார்த்திகை மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-

சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தற்போது கார்த்திகை மாதத்தில் வரும் கடைசி சுப முகூர்த்த தினமான வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு உள்ளன.

எனவே, கார்த்திகை மாதத்தில் வரும் கடைசி சுபமுகூர்த்த தினமான வருகிற 15-ந்தேதி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200 டோக்கன்களுக்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் வழங்கப்படும்.

அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு, ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன் மூலம் தமிழகம் முழுவதும் வருகிற 15-ந்தேதி 1,500 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த 1,500 டோக்கன்களும் பத்திரப்பதிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்று பொதுமக்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு அதிக அளவில் வருவார்கள் என்பதால் ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் பொதுமக்கள் அமருவதற்கு கூடுதல் நாற்காலிகள் போடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.