Tamilசெய்திகள்

வேளான் சட்டங்களுக்கு எதிராக போராடிய போது என்னை அருண் ஜெட்லி மிரட்டினார் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

‘அரசியலமைப்பு சவால்கள்’ என்ற தலைப்பில் டெல்லியின் இன்று நடைபெற்ற காங்கிரசின் வருடாந்திர சட்ட மாநாட்டில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “நான் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடியபோது, அருண் ஜெட்லி என்னிடம் வந்து என்னை மிரட்டினார். ‘நீங்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராகப் போராடினால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்’ என்று அவர் கூறினார். நான் அவரைப் பார்த்து, ‘நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லை’ என்றேன்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லி மகன் ரோகன் ஜெட்லி பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,”ராகுல் காந்தி, எனது மறைந்த தந்தை அருண் ஜெட்லி, வேளாண் சட்டங்கள் குறித்து அவரை மிரட்டியதாகக் கூறுகிறார்.

அவருக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன், எனது தந்தை 2019-ஆம் ஆண்டு காலமானார். வேளாண் சட்டங்கள் 2020-ஆம் ஆண்டுதான் கொண்டுவரப்பட்டன” என்று ஜெட்லி கூறினார். இது ஒரு தவறான குற்றச்சாட்டு மட்டுமல்ல, மரியாதை இல்லாத செயல் என்றும் ரோஹன் ஜெட்லி குறிப்பிட்டார். கருத்து வேறுபாடு கொண்டவர்களை அச்சுறுத்துவது தனது தந்தையின் குணம் அல்ல என்றும், அவர் எப்போதும் ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் நம்பிக்கை கொண்டவர் என்றும் ரோஹன் ஜெட்லி தெரிவித்தார்.