பிக் பேங் பூம் சொல்யூஷன்ஸ் ‘சக்தி’ R&D மையம் திறப்பு – சென்னை தீப்-டெக் புதுமைக்கு புதிய ஊக்கம்
சென்னை: பிக் பேங் பூம் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (BBBS) சென்னை பள்ளிக்கரணையில் ‘சக்தி’ எனப்படும் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்து, இந்தியாவின் தீப்-டெக் புதுமைக்கு புதிய ஊக்கத்தை வழங்கியுள்ளது. 20,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த நவீன வசதி, 200-க்கும் மேற்பட்ட பொறியாளர்களை தங்க வைக்கும் திறன் கொண்டது. இது நிறுவனத்தின் வளர்ச்சி பயணத்தில் முக்கிய மைல்கல்லாக இருந்து, நாட்டின் சிறந்த தொழில்நுட்ப திறன்களை வலுப்படுத்தும் நோக்கத்தை உறுதி செய்கிறது.
திறப்பு விழாவில் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் செயலாளர் திரு. ராஜேஷ்குமார் பாதக் தலைமை தாங்கி, தொழில்நுட்ப தன்னிறைவு அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், “சக்தி போன்ற மையங்கள் ஆராய்ச்சி மற்றும் நடைமுறை பயன்பாடு கிடையிலான இடைவெளியை குறைக்கும் முக்கிய பாலமாக அமைகிறது,” எனக் கூறினார். நிகழ்வில் “மூன் மேன்” டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு, இத்தகைய மையங்கள் பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறைகளில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றும் என பாராட்டினார்.
நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியும் இணை நிறுவனர் டாக்டர் சிவராமன் இராமசாமி, “‘சக்தி’ எங்களுக்கு ஒரு கட்டமைப்பு மைல்கல் மட்டுமல்ல, பல துறைகளில் இருக்கும் யோசனைகளை நடைமுறை தீர்வுகளாக மாற்றும் திறன் மையமாகும்,” என்றார். இந்த மையம் செயற்கை நுண்ணறிவு, நானோ தொழில்நுட்பம், மின்காந்த போர் துறை உள்ளிட்ட பல துறைகளில் ஆராய்ச்சி முன்னெடுத்து, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் உயர் நுட்ப துறைகளில் தன்னிறைவை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
