Tamilசெய்திகள்

அமெரிக்காவிடம் ஆயுதம் வாங்குவது நிறுத்தவில்லை – மத்திய அரசு விளக்கம்

ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 50 சதவீத வரி விதித்தார். டிரம்ப் உடனுடக்குடன் முடிவை மாற்றிக்கொள்பவர் என்பதால் இந்திய அதிகாரிகள் வரிவிதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் செயல்முறையை இந்தியா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தில் பரிட்சயம் கொண்ட 3 இந்திய அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்ததாக Reuters செய்தி நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.

அமெரிக்காவிடம் புதிய ஆயுதங்கள், போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்னும் ஓரிரு வாரங்களில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், அவரது பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவுடனான ஆயுத கொள்முதல் பேச்சுவார்த்தைகளை நிறுத்தியதாக வெளியான செய்திகளை பொய்யானவை என்று மத்திய அரசு மறுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சக அதிகாரி கூறுகையில், “அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பு கொள்முதல் தொடர்பான பேச்சுவார்த்தைகளை இந்தியா நிறுத்தியதாக வெளியான செய்திகள் தவறானவை மற்றும் ஜோடிக்கப்பட்டவை.

பல்வேறு கொள்முதல் செயல்முறைகள் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி நடந்து வருகின்றன என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.