Tamilசெய்திகள்

மலேசியாவின் யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் ஏவியேஷனுடன் (UniCAM) சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் காலேஜ் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியாவின் முன்னணி விமானவியல் பயிற்சி நிறுவனங்களில் ஒன்றான சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரி, சர்வதேச விமானப் போக்குவரத்து நிபுணத்துவத்தை நேரடியாகத் தனது கல்வி வளாகத்திற்குக் கொண்டு வரும் நோக்கத்தோடு, மலேசியாவின் யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் ஏவியேஷனுடன் (UniCAM) ஒரு முக்கிய சர்வதேசப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. மாணவர்களின் நடைமுறை அறிவை வலுப்படுத்தவும், அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கவும், உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறையில் சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான திறன்களை அவர்களுக்கு வழங்குவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU), சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் திரு. பூமிநாதன், மலேசியாவின் யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் ஏவியேஷனின் டீன் திரு. உமர் அப்தில்லா அன்வர், மலேசியாவின் ஃபியூச்சர் ட்ரீம் அகாடமியின் தலைவர் திரு. கலையரசன் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு. ஜெய்நானக் சிங் ஆகியோர் முன்னிலையில் இன்று கையெழுத்தானது. இந்நிகழ்வில் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரியின் தலைமை செயல்பாட்டு அதிகாரி திருமதி. பானுமதி, டீன் திரு. சுரேன், ஏவியேஷன் துறை பேராசிரியர் திரு. அருண் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர். ராகுல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, சர்வதேச விமானப் போக்குவரத்து நிபுணர்கள் கலந்துகொண்ட நான்கு நாள் சர்வதேசப் பயிற்சி முகாம் ஏப்ரல் 6 முதல் 9, 2026 வரை சென்னையில் நடைபெற்றது. விமானப் போக்குவரத்துத் துறையில் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மற்றும் UniCAM-ன் முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில், சிறப்பு விரிவுரைகள் மற்றும் பயிலரங்குகள் இடம்பெற்றன. ஏவியேஷன் 4.0 மற்றும் டிஜிட்டல் மாற்றம், விமானப் போக்குவரத்தில் செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ந்து வரும் பங்கு, விமான நிலைய செயல்பாடுகள் மற்றும் விமான சேவை மேலாண்மையில் சமீபத்திய புத்தாக்கங்கள், மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் புதிதாக உருவாகி வரும் வேலைவாய்ப்புகள் ஆகிய தலைப்புகளில் இப்பயிற்சி முகாம் மாணவர்களுக்குச் சிறந்ததொரு தளமாக அமைந்தது.

சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் திரு. ஆர். பூமிநாதன் இது தொடர்பாகக் கூறியதாவது: “தென்னிந்தியாவைத் தொடர்ந்து வடஇந்தியாவிலும் கால் பதித்து, முதல் கல்லூரியை கூடிய விரைவில் புது டெல்லியில் திறக்கப்படும். மாணவர்களது கல்விப் பயணத்தின் ஒரு அங்கமாகச் சர்வதேச விமான நிலையங்களில் பயிற்சித் திட்டத்தை வழங்கும் வெகுசில கல்லூரிகளுள் எங்கள் கல்லூரியும் ஒன்று என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். சர்வதேச அளவில் பல்வேறு நிறுவனங்களுடன் நாங்கள் மேற்கொண்டிருக்கும் கூட்டாண்மைகள் மற்றும் நிஜமான விமான மாதிரி, சிறிய அளவிலான விமான நிலையம் உள்ளிட்ட எங்களின் சிறப்புக் கட்டமைப்பு வசதிகள் மாணவர்களுக்கு நடைமுறை வழியிலான கற்றலைச் சாத்தியமாக்குகின்றன. இதன் மூலம் விமானவியல் துறையில் பணியாற்றுவதற்கேற்ற சிறந்த திறன் கொண்டவர்களாக எமது மாணவர்கள் உருவாக்கப்படுகின்றனர்,” என்றார்.

விமானப் போக்குவரத்துத் துறையில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகளைச் சுட்டிக்காட்டிய அவர், 2035-ஆம் ஆண்டிற்குள் விமானிகள், கேபின் பணியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் விமானநிலையத்தில் தரைத்தள பணியாளர்கள் போன்ற பணிகளுக்குத் தகுதியும் திறமையும் வாய்ந்த சுமார் 1.5 முதல் 2 லட்சம் பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்பதையும் குறிப்பிட்டார்.

சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியின் ஒரு பகுதியான இந்நிறுவனம், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வித் திட்டங்களை வழங்குகிறது. விமானப் போக்குவரத்தில் இளங்கலைப் பட்டம் (3 ஆண்டுகள்); பி.எஸ்சி ஏர் டிரான்ஸ்போர்ட் மற்றும் ஏவியேஷன் & டூரிசம் மேனேஜ்மென்ட் டிப்ளமோ படிப்புகள் இதில் அடங்கும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, மூன்றாண்டு காலப் பட்டம் மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேரும் மாணவர்கள் தங்களது முதல் இரண்டு ஆண்டுகளைச் சென்னையில் உள்ள சென்னைஸ் அமிர்தா வளாகத்தில் முடிப்பார்கள். அதன்பிறகு அவர்கள் மலேசியாவிற்குச் செல்வார்கள். இறுதி ஆண்டில், UniCAM-ல் ஆறு மாத காலக் கல்விப் பயிற்சியும், மலேசிய விமான நிலையங்களில் ஆறு மாத கால உள்ளகப் பயிற்சியும் பெறுவார்கள். இந்தப் பயிற்சி, மாணவர்களுக்கு மதிப்புமிக்க சர்வதேசப் பணி அனுபவத்தையும், துறை சார்ந்த நேரடி நடைமுறை அறிவையும் வழங்கும்.

விமானப் போக்குவரத்துத் துறையைப் பொறுத்தவரை, சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் (IATA) சான்றிதழ் என்பது உலகளாவிய வேலைவாய்ப்புகளுக்கான ஒரு நுழைவுச்சீட்டாகப் பரவலாகக் கருதப்படுகிறது.

மாணவர்களுக்கு எவ்வித கட்டணமுமின்றி முற்றிலும் இலவசமாக IATA பயிற்சியை வழங்குவதன் மூலம் சென்னைஸ் அமிர்தா இத்துறையில் தனிச்சிறப்புடன் திகழ்கிறது. பிற கல்வி நிறுவனங்கள் இப்பயிற்சிக்கு ₹50,000 முதல் ₹1.5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கும் நிலையில், இங்கு மாணவர்களுக்கு முழுமையான பயிற்சியும், தேர்வுக்கான முன்னேற்பாடுகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. IATA தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த திருமதி. க்ரீஷ்மா அவர்கள் இப்பயிற்சியை வழங்குகிறார்.

இந்தச் சர்வதேச அனுபவம், வேகமான வளர்ச்சியையும் மாற்றத்தையும் எதிர்கொண்டு வரும் விமானப் போக்குவரத்துத் துறையைப் பற்றி மாணவர்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.

வெளிநாடுகளில் சர்வதேச அளவிலான பயிற்சித் திட்டங்களுக்குச் செல்வதற்கான கல்விக்கடன் உதவி, மாணவர்கள் மாத வருவாய் ஈட்ட உதவும் பகுதிநேர வேலைவாய்ப்புகள் மற்றும் சிறந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரும் வலுவான துறைசார் இணைப்புகள் என மாணவர்களின் நலன் சார்ந்த முன்னெடுப்புகளில் சென்னைஸ் அமிர்தா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.