Tamilசெய்திகள்

அயத்துல்லா காமேனி படுகொலை – காங்கிரஸ் கண்டனம்

அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி படுகொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டுள்ளகண்டன அறிக்கையில், “ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி ராணுவத் தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் தலைவரை இலக்கு வைத்துத் தாக்குவது ஐநா சாசனத்திற்கு எதிரானது. இது ஆட்சி மாற்றத்தை வலுக்கட்டாயமாக திணிக்கும் செயல். இது ஏகாதிபத்தியத்தின் வெளிப்பாடு” என்று தெரிவித்துள்ளது.