X

நாடு முழுவதும் உள்ள சிபிஐ அலுவலங்கள் முன்பு காங்கிரஸ் போராட்டம்!

சிபிஐ அமைப்பில் லஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டியதையடுத்து, சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

சி.பி.ஐ இயக்குனர் அலோக் வர்மாவை நீக்கிய விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. ரபேல் ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை அலோக் வர்மா சேகரித்து வந்த நிலையில், அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியதைக் கண்டித்து நாடு முழுவதிலும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்தது. டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு நடைபெறும் போராட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று அனைத்து சிபிஐ அலுவலகங்கள் முன்பும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் தயாராகினர். காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளதால், சிபிஐ அலுவலகங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

காங்கிரசின் இந்த போராட்டத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெல்லியில் ராகுல் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.