Tamilசெய்திகள்

தமிழகத்தில் மீண்டும் திமுக அரசு அமையப்போகிறது என்பதற்கு ஆளுநர் மாற்றம் முன்னோடி – ரவிக்குமார் எம்.பி

தமிழக ஆளுநராக இருந்து ஆர்.என். ரவி மேற்கு வங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கான இந்திய உள்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஆட்சி மாற்றம் நடத்த வேண்டும் என்ற நோக்கத்திலே மத்திய உள்துறையால் அனுப்பி வைக்கப்பட்ட ஆளுநர், அந்த நோக்கத்தை செய்ய முடியாமல் தோல்வியடைந்து மாற்றமாகி போயிருக்கிறார். ஆளுநரின் இடமாற்றம் தமிழகத்தில் மீண்டும் திமுக அரசு அமையப் போகிறது என்பதற்கான முன்னோடி.

பாஜக மற்றும் மத்திய அரசு இதை ஒப்புக் கொண்டுள்ளது என்பதானது தான் ஆளுநர் இடமாற்றம். திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கப் போகிறது. இதற்கு உதவிய ஆர்.என். ரவிக்கு மகத்தான நன்றி, ஏனென்றால் அவரால்தான் மாநிலத்தின் உரிமை என்ன என்பது குறித்து விரிவான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. எவ்வளவோ குழப்பத்தை ஏற்படுத்தி முயற்சித்தார். அனைத்திலும் தோல்வியடைந்தார். மம்தா பானர்ஜி மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்பதற்கு ஆர்.என். ரவி அங்கே மாற்றப்பட்டதே சான்று.

திமுக கூட்டணியில் இனிமேல் யாரையும் சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு இடமே கிடையாது. அந்த அளவிற்கு இட நெருக்கடி உள்ளது. டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற இருக்கிறாரா? என்று தெரியவில்லை. அங்கு யாருக்கு எவ்வளவு இடம் ஒதுக்கப்படும் என்பது தெரியவில்லை. அந்த கூட்டணிக்கு யார் தலைமை என்பதும் யாருக்கும் தெரியவில்லை. கூட்டணியின் தலைமையாக பாஜக மாறிவிட்டது. அதிமுக-வை மிகவும் நெருக்கடியான இடத்திற்கு எடப்பாடி பழனிசாமி கொண்டு போய் விட்டார். அதிமுக கூட்டணியில் இருந்தால் வெற்றி வாய்ப்பு இல்லை என்று சொல்லியிருக்கக் கூடும்.

இவ்வாறு ரவிக்குமார் தெரிவித்தார்.