Tamilசெய்திகள்

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு – 18 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம்

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்புயல் தாக்கி வருகிறது.

வடமேற்கு டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமா நகரில் கடும் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. இதற்கிடையே ஓக்லஹோமாவில் இருந்து வடகிழக்கு வரை கடும் பனிப்பொழிவு இருக்கும் என்றும் திங்கட்கிழமை வரை சில இடங்களில் ஒரு அடிக்கு மேல் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் இந்த பனிப்புயல் பல நாட்களுக்கு நீடிக்கும் என்றும், அதிக மக்கள் தொகை கொண்ட மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களுக்கு நகர்ந்து நாடு முழுவதும் ஒரு உறைபனியை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பனிப்புயலால் ஏற்படும் பனி மற்றும் உறைபனி டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை 3200 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் பரவியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 18 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

பனிப்புயல் எச்சரிக்கையை அடுத்து மக்கள் உணவு, பால், முட்டை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவித்தனர். இதனால் பல கடைகளில் பொருட்கள் விற்று தீர்ந்து அலமாரிகள் காலியாக இருந்தன. பனிப்புயலால் நீண்ட நேர மின்வெட்டு, மரங்க ளுக்குப் பரவலான சேதம் மற்றும் மிகவும் ஆபத்தான அல்லது பயணிக்க முடியாத சாலைப் போக்குவரத்து நிலைமைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்கா முழுவதும் பனிப்பொழிவால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 1800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.