Tamilசெய்திகள்

மணிப்பூர் வன்முறை விவகாரம் – அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு குகி- மெய்தி ஆகிய இரண்டு சமூகத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்தது. 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

ஆயிரக்கணக்கான வீடுகள் தீ வைத்து கொழுத்தப்பட்டன. மக்கள் சொந்த வீடுகளை இழந்து அண்டை மாநிலங்களுக்கும், முகாம்களுக்கும் தப்பி ஓடினர். இந்த வன்முறை தொடர்பாக 11 வழக்குகளை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான நீதிபதி ஜாய்மால்யா பாக்சி கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “11 எப்.ஐ.ஆர். தொடர்பாக விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டனர்.

மேலும், நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான கமிட்டி பரிந்துரை செய்த மறுவாழ்வு மற்றும் நலத்திட்டம் ஆகியவற்றை அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில மற்றும் மத்திய அரசை கேட்டுக்கொண்டனர்.

அத்துடன் வழக்கை வருகிற 23-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.