X

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்தின் பதவிக்காலம் டிசம்பர் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். சுனில் அரோரா டிசம்பர் 2-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ளார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த சுனில் அரோரா 1980-ம் ஆண்டில் ஐஏஎஸ் முடித்தார். தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, நிதித்துறை, ஜவுளித்துறை மற்றும் திட்டக் கமிஷனில் பணியாற்றியுள்ளார். இந்தியன் ஏர்லைன்ஸ் சேர்மனாகவும் 5 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி ஓய்வு பெற்றதையடுத்து, தேர்தல் ஆணையத்தில் சேர்க்கப்பட்டார்.

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜேவின் முந்தைய ஆட்சிக் காலத்தின்போது, அவரது மிகவும் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக விளங்கினார் அரோரா. 2005 முதல் 2008 வரை வசுந்தராவின் முதன்மைச் செயலாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.