Tamilசெய்திகள்

சிறையே எனது வாழ்க்கை ஆகிவிட்டது – உமர் காலித் உருக்கம்

2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த கலவர வழக்கில் JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உட்பட 15 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமின் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்ற அமர்வு அவர்களுக்கு ஜாமின் வழங்க பலமுறை மறுப்பு தெரிவித்தது.

சமீபத்தில் தனது சகோதரியின் திருமணத்திற்காக அவருக்கு 14 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. ஜாமின் காலம் முடிந்து கடந்த டிசம்பர் 29 காலித் சிறை திரும்பினார்.

இந்நிலையில், உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது. அதே சமயம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குல்ஃபிஷா ஃபாத்திமா, மீரா ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகிய 5 பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

இந்நிலையில் தனக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது குறித்து உமர் காலித் உருக்கமாக பேசியுள்ளார். அவர் பேசியவற்றை குறித்து அவரது தோழி பானோஜ்யோத்ஸ்னா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “எனக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்றாலும், மற்றவர்களுக்குக் கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது சிறையே எனது வாழ்க்கை ஆகிவிட்டது. மற்றவர்கள் விடுதலை ஆவதைப் பார்க்கும்போது நான் மிகவும் நிம்மதியாக உணர்கிறேன்” என உமர் காலித் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.