சென்னை மெரினா கடற்கரையில் ரோப்கார் திட்டம் – மீன்பிடி தொழிலாளர்கள் சங்கம் எதிர்ப்பு
சென்னை மெரினா கடற்கரையில் ரோப்கார் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கு தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மலைப் பிரதேசங்களிலும், பனிப் பிரதேசங்களிலும் பயன்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தை கடற்கரை பகுதியில் கொண்டு வர வேண்டியதன் அவசியம் என்ன?
பெருநகர சென்னை மாநகராட்சியின் இந்த செயல் இருக்கும் இயற்கையான புகழ்வாய்ந்த மெரினா கடற்கரையில் நெய்தல் நிலப்பரப்பை சீர்குலைக்கும் செயலாகும்.
கார்ப்பரேட் நிறுவனம் லாபம் சம்பாதிக்க மெரினா கடற்கரையை விற்க நினைப்பது வரலாற்று அபத்தம் மட்டுமல்ல, சென்னை வாழ் மக்களுக்கும், மீனவர்களுக்கும் மீனவர்களுக்கும் இழைக்கும் பெரும் அநீதியாகும்.
ஏற்கனவே மெரினா கடற்கரையில் நீலக்கொடி பிரதேச திட்டத்தை அமல்படுத்துவதற்கான திட்டத்தை அறிவித்து அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. நீலக்கொடி பிரதேச திட்டத்தை மெரினா கடற்கரையில் அமல்படுத்தக் கூடாது என அனைத்து மீனவ கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இப்பகுதியில் ரோப் கார் திட்டத்தை கொண்டு வருவது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு இந்த திட்டத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று சங்கத்தின் செயலாளர் ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார்.
