Tamilசெய்திகள்

குடல் மறுவாழ்வு மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உலகின் மிகப்பெரிய மையம்! – 3 ஆண்டுகளில் நிறுவி எம்.ஜி.எம் மருத்துவமனை சாதனை!

சென்னையில் உள்ள முன்னணி பல்நோக்கு மருத்துவமனையான எம்.ஜி.எம் ஹெல்த்கேர், குடல் மறுவாழ்வு மற்றும் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்காக உலகிலேயே மிகப்பெரிய மையத்தை மூன்றே ஆண்டுகளில் உருவாக்கிச் சாதனை படைத்துள்ளது.

சிறப்பு மருத்துவக் குழு அமெரிக்காவின் கிளீவ்லேண்ட் கிளினிக்கில் பணியாற்றி இந்தியா திரும்பிய, குடல் மற்றும் வயிற்று உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநரான பேராசிரியர் டாக்டர் அனில் வைத்யா அவர்களின் தலைமையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இத்திட்டம் தொடங்கப்பட்டது.

டாக்டர் செந்தில் முத்துராமன், டாக்டர் வெங்கடேஷ் பி.எஸ், டாக்டர் சிவகுமார் மகாலிங்கம் மற்றும் டாக்டர் மனோஜ் பிரபாகர் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர், தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் மயக்கவியல் நிபுணர்களான டாக்டர் சி.பி. தினேஷ் பாபு, மறைந்த டாக்டர் நிவாஷ் சந்திரசேகர் மற்றும் டாக்டர் சரவணன் ஆகியோருடன் இணைந்து இதனை ஒரு முழுமையான சேவையாக உருவாக்கியுள்ளனர்.

இத்திட்டத்தின் வெற்றி குறித்துப் பேசிய பேராசிரியர் டாக்டர் அனில் வைத்யா, “குடல் மறுவாழ்வு மற்றும் மாற்று அறுவைசிகிச்சை என்பது மருத்துவத் துறையில் மிகவும் சிக்கலான பிரிவாகும். செயலிழந்த குடலுக்குப் பதிலாக தானமாகப் பெறப்பட்ட குடல் பொருத்தப்பட்டு, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை இயற்கையாக உறிஞ்சும் திறன் நோயாளிக்குத் திரும்ப வழங்கப்படுகிறது. இது வெறும் அறுவைசிகிச்சைக்கான திட்டம் மட்டுமல்ல; அறுவைசிகிச்சை, மறுவாழ்வு, வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பராமரிப்பு, நோய்த்தொற்றுக் கட்டுப்பாடு மற்றும் நீண்டகால கண்காணிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான மருத்துவக் கட்டமைப்பாகும்” என்று கூறினார்.

98% வெற்றி விகிதம்: அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள முன்னணி மருத்துவமனைகளுக்கு இணையான சிகிச்சை வெற்றி விகிதத்தை இந்த மையம் கொண்டுள்ளது. இங்கு சிகிச்சை பெற்ற 98% நோயாளிகள், நேரடியாக ரத்தத்தில் ஊட்டச்சத்தைச் செலுத்தும் ‘TPN’ முறையிலிருந்து முழுமையாக விடுபட்டு, நோய்த்தொற்று மற்றும் கல்லீரல் பாதிப்பு அபாயங்களின்றி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.

இந்தியாவின் முதல் ‘மாற்று அறுவைசிகிச்சை புற்றுநோயியல்’ திட்டம்: அறுவைசிகிச்சை மூலம் குணப்படுத்த முடியாத ‘சூடோமைக்சோமா பெரிடோனி’ எனப்படும் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குடல் மாற்று அறுவைசிகிச்சையை ஒரு தீர்வாக இம்மையம் வழங்குகிறது. உலகிலேயே இது போன்ற மூன்றாவது திட்டம் இதுவாகும்.

இத்திட்டத்தின் வெற்றிக்கான மூன்று முக்கிய அம்சங்கள்:

வீட்டிலேயே ஊட்டச்சத்து பெறும் (HPN) திட்டம்: மருத்துவமனைக்கு வெளியேயும் நோயாளிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து ஆதரவை வழங்குதல். ‘டார்பிமெக்ஸ்’ (Dorbimex) பயன்பாடு: காப்புரிமை பெற்ற இந்தப் புதிய கிருமிநாசினி ஸ்ப்ரே, குழாய்கள் மற்றும் காயங்களைப் பராமரிப்பதில் ஏற்படும் நோய்த்தொற்று விகிதங்களைக் கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகக் குறைத்துள்ளது. ‘பேக் டு பேஸ்’ (Back to Base) போக்குவரத்து: தீவிர குடல் பாதிப்புள்ள நோயாளிகள் மும்பை, டெல்லி, ஆக்ரா, கொல்கத்தா மற்றும் கோவா போன்ற இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வான்வழி, சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். இந்தியாவில் முன்னெடுக்கப்படும் முதல் முயற்சி இதுவாகும்.

“குடல் செயலிழப்பு என்பது பல துறைகளின் ஒருங்கிணைந்த நிபுணத்துவம் தேவைப்படும் ஒரு பிரச்சனை. மிகச் சிக்கலான சிகிச்சைகளை இந்தியாவிலேயே சிறப்பாகத் திட்டமிட்டு வழங்க முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு இந்த மையம். மேம்பட்ட நவீன மருத்துவம், மேலைநாடுகளில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் சாத்தியம் என்பதை இது தெளிவாக உணர்த்துகிறது” என்று டாக்டர் வைத்யா மேலும் தெரிவித்தார்.