அமெரிக்காவின் வரி விதிப்பால் வேலை இன்றி தவிக்கும் திருப்பூர் ஆடை தொழிற்சாலை தொழிலாளிகள்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த 50 சதவீத வரி விதிப்பால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் – ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஆண்டுதோறும் திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ரூ.45 ஆயிரம் கோடி ஆடைகளில் பாதி அளவு அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதன் மூலம் ரூ.15ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி பாதிக்கும் சூழல் உள்ளது. 50 சதவீத வரி விதிப்பு நடைமுறைக்கு வந்த நிலையில், அமெரிக்க இறக்குமதியாளர்கள் இப்போதைக்கு ஆடைகளை அனுப்ப வேண்டாம் என்று கூறியதால் தற்போது திருப்பூர் பனியன் நிறுவனங்களில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்த ரூ.5000 கோடி மதிப்பிலான ஆடைகள் தேங்கி கிடக்கிறது. நிலைமை சரியானதும் அனுப்புமாறு அமெரிக்க இறக்குமதியாளர்கள் கூறியுள்ளதால் என்னசெய்வதென்று தெரியாமல் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக சில பனியன் நிறுவனங்களில் ஆடைகள் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூரில் பல ஆண்டுகளாக ஆடை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வரும் பீகாரை சேர்ந்த பிரதான் குமார் கூறியதாவது:-
அமெரிக்க வரி தாக்கத்தால் ஏற்படும் நிதி மந்தநிலையால் அச்சத்தில் உள்ளோம்.30 ஆண்டுகளாக சுறுசுறுப்புடன் இயங்கி வந்த எனது நிறுவனம் இப்போது அமைதியாகி விட்டது. கடந்த 3 வாரங்களாக வேலை ஆர்டர்கள் வெகுவாகக் குறைந்ததால்,தொழிலாளர்கள் சிலரை மட்டும் பணியில் அமர்த்தி உள்ளேன். மற்றவர்களை பணிநீக்கம் செய்துள்ளேன். வேலை செய்பவர்களில் ஒரு சிலர் மதியம் வரை மட்டுமே வேலை செய்கிறார்கள்.இதனை நான் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு பேரழிவு.
நான் 20 வருடங்களுக்கு முன்பு திருப்பூருக்கு வந்தேன். பனியன் நிறுவனங்களில் சிறிய வேலைகளை செய்தேன். ஆடை உற்பத்தியில் உள்ள நுணுக்கங்களை படிப்படியாகக் கற்றுக்கொண்டேன். பின்னர் பெரிய நிறுவனங்களில் துணி வாங்குதல், வெட்டுதல் மற்றும் பின்னல் போன்ற முழு அளவிலான வேலைகளையும் அவுட்சோர்ஸ் செய்து , பின்னர் ஆடை உற்பத்தியில் ஈடுபட்டேன்.
முன்னேற்ற நிலையில் இருந்த திருப்பூர் இப்போது அமெரிக்க வரி விதிப்பால் ஒரு மோசமான சூழ்நிலையில் உள்ளதை பார்க்கிறேன்.பள்ளியில் படிக்கும் எனது 3 குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்த முடியவில்லை. இ.எம்.ஐ. செலுத்த முடியாமல் தவிக்கிறேன் என்றார்.
இவரைப்போலவே, வட இந்திய மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வந்து தொழில் செய்யும் பலர் அமெரிக்காவின் வரி விதிப்பால் பாதிப்பை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
