Tamilசெய்திகள்

ஈரானின் புதிய உச்ச தலைவர் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.92 கோடி வழங்கப்படும் – அமெரிக்கா அறிவிப்பு

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி மற்றும் ஈரான் ராணுவ பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதிகாரிகளின் இருப்பிடத்தை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர் (சுமார் 92.47 கோடி ரூபாய்) பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி, துணை தலைமை அதிகாரி அலி அஸ்கர் ஹுஜாசி, மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவர் அலி லாரிஜானி ஆகியோரின் புகைப்படங்களை வெளியிட்ட அமெரிக்கா, உலகம் முழுவதும் பயங்கரவாத செயல்களை திட்டமிட்டு செயல்படுத்துவதாக கூறி இந்த வெகுமதியை அறிவித்துள்ளது.

முன்னதாக கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானின் தெஹ்ரான் நகரில் அமெரிக்க – இஸ்ரேல் குறிவைத்து நடத்திய தாக்குதலில் அப்போதைய உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார். இவர் தற்போதைய தலைவர் மொஜ்தபாவின் தந்தை ஆவார். மறுபுறம், ஈரானுக்கு எதிரான நடவடிக்கையின் போது அமெரிக்காவின் எரிபொருள் நிரப்பும் விமானம் ஒன்று ஈராக்கின் மேற்குப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 6 வீரர்களில் 4 பேர் உயிரிழந்ததாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. தங்களது தாக்குதலால் தான் அந்த விமானம் வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. இருப்பினும், எதிரிகளின் தாக்குதலால் இந்த விபத்து நடக்கவில்லை என்றும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம் என்றும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ஈரான் மீது வரும் நாட்களில் மிகவும் கடுமையான ராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா நடத்தும் என்று அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார்.