ரசிகர்களின் எதிர்பார்ப்பில் ’மண்டாடி’! – முன்பதிவு இன்று தொடங்குகிறது!
தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக ‘மண்டாடி’ உருவெடுத்துள்ளது. காரணம், இப்படத்தின் அறிமுக விழாவில் திரையிடப்பட்ட பாய்மரப் படகு போட்டி தொடர்பான காட்சிகள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் டிரைலர் பாய்மரப் படகு போட்டியுடன் மிகப்பெரிய ஆக்ஷன் படம் என்ற அடையாளத்தையும் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது. இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆர்.எஸ் இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க, இணை தயாரிப்பாளராக வி.மணிகண்டன் பணியாற்றியுள்ள இப்படத்தின் கதை எழுதி மதிமாறன் புகழேந்தி இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரதீப் ஈ.ராகவ் படத்தொகுப்பு செய்ய, கலை இயக்குநராக டி.ஆர்.கே.கிரண் பணியாற்றியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இதிராத சொல்லப்படாத மற்றும் காட்சிப்படுத்தப்படாத பாய்மரப் படகு போட்டியை மிக தத்ரூபமாக படமாக்கப்பட்டிருக்கும் ‘மண்டாடி’ படத்தில் சூரி நாயகனாக நடிக்க நாயகியாக மகிமா நம்பியார் நடித்திருக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், சுஹாஸ், மிதுன் ஜெய்சங்கர், ரவீந்திரவிஜய், பால சரவணன், ஸ்டண்ட் சிவா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘மண்டாடி’ திரைப்படம் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பிற மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யும் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. காரணம், படத்தின் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் படகுப் போட்டி காட்சிகள் அனைத்தும் பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைக்கும் விதத்தில் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் டிரைலர் வெளியான சில நாட்களிலேயே மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனைப் படைத்திருக்கும் நிலையில், இன்று (செப்டம்பர் 6) மாலை முதல் ‘மண்டாடி’ திரைப்படத்தின் முன்பதிவு தொடங்க உள்ளது.
சூரி நாயகனாக நடித்த அனைத்துப் படங்களும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், ‘மண்டாடி’ திரைப்படம் சூரியை ஆக்ஷன் ஹீரோவாக நிலைநிறுத்துவதோடு, அவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
