Tamilசெய்திகள்

ஆதவ் அர்ஜுனா கூட்டத்தில் பாட்டில்கள் வீசிய இருவர் கைது!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து வில்லிவாக்கத்தில் நேற்று (மார்ச் 31) பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. வி.எஸ்.பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா ஆதரித்து தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் மீது பாட்டில்கள் வீசியதாக சலசலப்பு ஏற்பட்டது. இதில் தவெக பெண் நிர்வாகி காயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆதவ் அர்ஜூனா, கண்ணாடி பாட்டிலை வைத்து அடிப்பதுதான் ஜனநாயகமா என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் தவெக கூட்டத்தில் பாட்டில் வீசியதாக ரித்விக், அப்புக்குட்டி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நண்பர்களான அவர்கள் இருவருக்குள்ளும் குடிபோதையில் ஏற்பட்ட சண்டையில் பாட்டில்களை வீசியதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.