Tamilசெய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் 14 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது – அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தில் தற்போது வரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயிகளுக்கு, 3 ஆயிரத்து 969 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 14 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 5 சவரன் வரை நகைக்கடன் பெற்று தற்போது வரை ஒரு லட்சம் பேர் நகை கடனுக்கான உறுதிமொழி பத்திரம் கொடுக்கவில்லை. எனவே அவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்ய முடியாத நிலை உள்ளது.

உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் அவர்களுக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். சென்னை அண்ணாநகர், திருமங்கலம், தியாகராயநகர் உள்ளிட்ட 10 ரேஷன் கடைகள், கூட்டுறவு மருந்தகங்களில் கூகுள் பே மூலம் பணம் செலுத்தி பொருட்களை பெரும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவ மழையால் காய்கறி விலை உயர்வு ஏற்பட்டால், பசுமை பண்ணை காய்கறி கடைகளில் குறைந்த விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.