Tamilசெய்திகள்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது.

இதனிடையே,பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரக அதிபா் ஷேக் முகமது பின் ஸயத் அல்நஹ்யானிடம் தொலைபேசி வாயிலாக நேற்று பேசினாா். அப்போது யுஇஏ மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தாா்.

இந்நிலையில், பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசினார். போர் நடவடிக்கைகளை விரைவில் நிறுத்தவேண்டும் என்று பிரதமர் மோடி அவரிடம் வலியுறுத்தினார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தற்போதைய பிராந்திய நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த இந்தியாவின் கவலைகளைத் தெரிவித்ததோடு, பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்குமாறு வலியுறுத்தினேன். போர் நடவடிக்கைகளை விரைவில் நிறுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.