கிறிஸ்த்தவ தேவாலயங்களை குறிவைக்கும் மத்திய அரசு நேரடி தாக்குதல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
கிறிஸ்த்தவத் தொண்டு நிறுவனங்களையும் தேவாலயங்களையும் குறிவைத்து வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டமுன்வரைவு, 2026 என்ற பெயரில் பாஜக அரசால் முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்கள் முழுக்க முழுக்க கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்களையும், தேவாலயங்களையும், பிற மதச் சிறுபான்மைத் தொண்டு நிறுவனங்களையும், குறிவைத்துத் தொடுக்கப்படும் நேரடித் தாக்குதலாகும்.
ஏற்கெனவே வக்பு வாரிய சட்டத்திருத்தம் மூலம் இஸ்லாமிய சொத்துகளைக் கபளீகரம் செய்ய முயன்றதையடுத்து, தற்போது மற்ற மதச்சிறுபான்மையின அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு இறங்கியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் போராட்டத்தாலும், கிறிஸ்தவர்கள் அதிக அளவில் வாழும் கேரளத்தில் தேர்தல் நடைபெற இருப்பதாலும் இப்போதைக்குப் பின்வாங்குவது போல நடித்து, விரைவில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டி இந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற பாஜக அரசு திட்டமிடுவதாக அறிகிறேன்.
இந்த முயற்சிகளைக் கைவிட்டு, பிரதமர் அவர்கள் இந்தத் தன்னிச்சையான, அநியாயச் சட்டத்திருத்தத்தை முற்றிலுமாகத் திரும்பப் பெறும் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
