தூத்துக்குடியில் ஒப்பந்ததாரருக்குக் கத்திக்குத்து! – இருவர் கைது!
தூத்துக்குடி பூபாலராயபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி (50). இவர் ஒப்பந்தத் தொழில் செய்து வருகிறார். நேற்று அந்தோணி தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 4பேர் கொண்ட கும்பல் போதை போதையில் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த அந்த 4 பேரும் சேர்ந்து அந்தோணியைக் கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அந்தோணி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் காசி பாண்டியன் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பூபாலராயபுரத்தைச் சேர்ந்த விஜய் (36) மற்றும் திரேஸ்புரத்தைச் சேர்ந்த சஞ்சய் (24) ஆகிய இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்ற இருவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
