Tamilசினிமா

பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு மூன்று விருதுகள்

பார்த்திபன் இயக்கி நடித்த படம் “ஒத்த செருப்பு சைஸ் 7”. ஆஸ்கர் அகாடமி விருது குழுவின் விமர்சகர்கள் முதல், தியேட்டரில் படம் பார்த்த அடிமட்ட ரசிகர்கர்கள் வரை அனைவரும் பாராட்டிய இப்படம், தமிழ் சினிமாவில் ஒரு பெரும் புரட்சியை, புதிய அலையை ஏற்படுத்தியது.

தற்போது இந்த படம் 2020 ட்ரோண்டோ உலகத்தமிழ் திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றுள்ளது. ஜீரி விருதான சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த தனி சோலோ நடிப்பு என மூன்று விருதுகளை இப்படம் பெற்றுள்ளது.

நடிகர், இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இது குறித்து கூறியதாவது…

மனதை தாலாட்டும் மற்றுமொரு பாராட்டு. “ஒத்த செருப்பு சைஸ் 7 “ 2020 ட்ரோண்டோ உலகத்தமிழ் திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றுள்ளது எனக்கு கிடைத்த பெருமை. இந்த படம் கடந்த வருடம் பல இன்னல்களுக்கு நடுவே, நான் போட்ட விதை. அது இந்த வருடம் பூர்வ ஜென்ம புண்ணியம் போல் பாராட்டுக்களை கொண்டு வந்து சேர்த்துகொண்டே இருக்கிறது. இவ்வருடம் எனது அடுத்த மாபெரும் முயற்சியாக “இரவின் நிழல்” திரைப்படத்தை தொடங்கியுள்ளேன் இதற்கான பெருமையும், பாராட்டுக்களும் அடுத்த வருடம் கிடைக்குமென ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.