ஈரான் தாக்குதலில் இந்தியர் மரணம் – கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் காரணமாக ஹோர்முஸ் நீரிணைப் பாதை பாதிக்கப்பட்டுள்ளது. இப்பாதையாகச் செல்லும் சரக்குக் கப்பல்களை ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் தாக்கி வருகிறது. ஓமனுக்கு அருகே ஹோர்முஸ் நீரிணையில் சென்ற ஐக்கிய அரபு அமீரக (UAE) சரக்குக் கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10 இந்தியர்கள் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள ஈரான் தூதரக அதிகாரிகளை மத்திய அரசு நேரில் வரவழைத்து விளக்கம் கோரியுள்ளது.
சர்வதேச கப்பல்களில் பணியாற்றும் இந்தியப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களில் இந்தியப் பணியாளர்களைப் பணியமர்த்தக் கூடாது என்று கப்பல் உரிமையாளர்கள், கப்பல் மேலாளர்கள் மற்றும் ஆள்சேர்ப்பு முகமைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியக் கப்பல் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதிகளில் இயங்கும் கப்பல்களின் கேப்டன்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உதவி தேவைப்படும் கப்பல் பணியாளர்கள் மற்றும் கப்பல்கள், கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்தின் தகவல் தொடர்பு மையம் அல்லது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான இந்தியக் கடற்படையின் தகவல் ஒருங்கிணைப்பு மையத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
