Tamilசினிமா

பாடகர் எஸ்.பி.பியின் 75 வது பிறந்தநாள் – பாடல் மூலம் வாழ்த்து தெரிவித்த பாடகி

பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ள இவர், கடந்தாண்டு செப்டம்பர் 25-ந் தேதி காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல பின்னணி பாடகி சுவேதா மோகன், பாட்டுப்பாடி எஸ்.பி.பி.க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘பாடும் நிலாவே’ பாடலை பாடியுள்ள சுவேதா மோகன், எஸ்.பி.பி. குறித்து கூறியதாவது: “எஸ்.பி.பி. அவர்களுடைய குரலாலும், இசையாலும் நம்முடைய வாழ்க்கை என்றைக்கும் நிறைந்திருக்கும் என நான் நம்புகிறேன். அவர் நம்முடன் தான் இருக்கிறார் என நான் தீர்க்கமாக நம்புகிறேன். எஸ்.பி.பி. சார், நீங்க எங்க இருந்தாலும் உங்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.