Tamilசெய்திகள்

தமிழகத்தில் 76 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது – அமைச்சர் தகவல்

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.2 கோடியே 16 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் ஜெனரேட்டரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

மருத்துவத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, ஆஸ்பத்திரி டீன் (பொறுப்பு) டாக்டர் ஜெமிலா ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நவம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் என்ற இலக்கோடு பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். தற்போது 76 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 40 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளில் இதுவரை 27 லட்சத்து 19 ஆயிரத்து 707 பேருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

மருத்துவ கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்களுக்கு வழங்கும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை என்பது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக இருக்கும். டெங்கு காய்ச்சலால் இதுவரை 6 பேர் உயிரிழந்து உள்ளனர். 513 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.