Tamilசெய்திகள்

அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட பொதுமக்கள் – இலங்கையில் ஊரடங்கு உத்தரவு

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதால் பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் மக்கள் காத்துக்கிடக்கிற நிலை உருவாகி உள்ளது.

மேலும் மின் உற்பத்திக்காக அனல்மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காததால் மின் விநியோகத்தில் 750 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொழும்பு நகரில் நாள் ஒன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு காணப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை முற்றுகையிட்டனர்.

உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர். அங்கிருந்த தடுப்பு வேலிகளை அகற்றிய அவர்கள் ராணுவ வாகனத்திற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் முற்றுகை போராட்டம், வன்முறையாக மாறியது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைத்தனர். இந்த போராட்டம் காரணமாக கொழும்புவில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.

இதையடுத்து கொழும்பு நகரின் வடக்கு, தெற்கு, மற்றும் மத்திய நுகேகொட காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.