Tamilசெய்திகள்

இந்தியாவில் புதிதாக 15,135 பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் புதிதாக 16,135 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 17,092 ஆக இருந்தது. நேற்று 16,103 ஆக குறைந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 18 ஆயிரத்து 564 ஆக உயர்ந்தது. கடந்த 1 வாரத்தில் மட்டும் 1.10 லட்சம் பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது.

முந்தைய வார பாதிப்பு 97,573 ஆக இருந்தநிலையில் கடந்த ஒரு வாரத்தில் சுமார் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவில் தற்போது தான் ஒரு வார பாதிப்பு 1 லட்சத்தை தாண்டி உள்ளது.

கொரோனா தொற்றால் கேரளாவில் 9, மகாராஷ்டிராவில் 6 பேர், டெல்லியில் 5 பேர், மேற்கு வங்கத்தில் 3 பேர், மிசோரத்தில் ஒருவர் என மேலும் 24 பேர் இறந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,25,223 ஆக உயர்ந்தது.

தொற்று மீட்பு சிகிச்சையில் இருந்து 13,958 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 79 ஆயிரத்து 477 ஆக உயர்ந்தது. தற்போது 1,13,864 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 2,153 அதிகம் ஆகும்.

நாடு முழுவதும் நேற்று 1,78,383 டோஸ்களும், இதுவரை 197 கோடியே 98 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று 3,32,978 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 86.39 கோடியாக உயர்ந்துள்ளது.