Author: rediuser1

Tamilசெய்திகள்

பிரான்ஸிடம் இருந்து ரூ.63,000 கோடி மதிப்பிலான ராஃபேல் போர் விமானங்களை வாங்கும் இந்தியா!

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.63,000 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் போர் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் போா் விமானங்களை பிரான்ஸ் அரசிடம் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சரவைக் குழு நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒப்புதல் வழங்கியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தகவலின்படி, 22 ஒற்றை இருக்கை ரக ரஃபேல் கடற்படை விமானங்களும், 4 இரட்டை இருக்கை ரக ரஃபேல் கடற்படை விமானங்களும் பிரான்சிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதில், 10 விமானங்கள் நடுவானில் எரிபொருளை நிரப்பும் வசதியுடன் வடிவமைக்கப்படவுள்ளன. இந்த மாத இறுதியில், பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னு இந்தியா வருகை தரவுள்ள நிலையில் அப்போது இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தம் கையெழுத்தான தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவிடம் 26 விமானங்களும் ஒப்படைக்கப்படும். ஏற்கனவே இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் ஜெட் விமானங்கள் உள்ளன. அவை அம்பாலா மற்றும் ஹஷிமாராவில் உள்ள தளங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தற்போது கொள்முதல் செய்யப்பட உள்ள விமானங்கள் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

Read More
Tamilசெய்திகள்

கட்சிப் பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வெடுக்க வேண்டும் – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

குஜராத் மாநிலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சி பணிக்கு உதவி செய்யாதவர்கள் ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக கார்கே பேசியதாவது:- கட்சியின் அமைப்புகளை உருவாக்குவதில் மாவட்டத் தலைவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும். எனவே, அவர்கள் கட்சியின் வழிகாட்டுதல்களின்படி பாரபட்சமின்றி நியமனம் செய்யப்பட வேண்டும். நாட்டின் அனைத்து மாவட்டத் தலைவர்களையும் மூன்று கட்டங்களாக அழைத்து பேசியுள்ளோம்.. ராகுல் காந்தியும் நானும் அவர்களுடன் பேசி அவர்களின் கருத்துக்களைப் பெற்றோம். எதிர்காலத்தில், தேர்தல்களுக்கான வேட்பாளர் தேர்வு நடைமுறையில் மாவட்டத் தலைவர்கள் ஈடுபாடு இருக்கும். கட்சிப் பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வெடுக்க வேண்டும். தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றாதவர்கள் ஓய்வு பெற வேண்டும். இவ்வாறு கார்கே தெரிவித்தார்.

Read More