Tamil

Tamilசெய்திகள்

நாங்குநேரி மாணவர் தாக்குதல் – போலீசார் விளக்கம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு சின்னத்துரை (வயது18) என்ற மகனும், 1 மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாதி ரீதியிலான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவன் சின்னத்துரை படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கல்வியை தொடர்ந்தார். தற்போது சின்னத்துரை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு அவர் படித்து வருகிறார். அவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் பெருமாள்புரம் திருமால் நகரில் உள்ள குடிசை மாற்று வாரியம் குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்று மாலை தனது நண்பன் அழைப்பதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற அவரை கொக்கிரகுளம் அறிவியல் மையம் அருகே உள்ள வசந்த் நகரில் வைத்து சிலர் தாக்கியதாகவும், தன்னிடம் இருந்த பணம் மற்றும் செல்போனையும் பறித்துச் சென்று விட்டதாகவும் அவர் தனது தாயாருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். லேசான காயங்களுடன் இருந்த அவருக்கு சிகிச்சை முடிந்து நேற்று இரவு வீட்டிற்கு அனுப்பப்பட்டார். இதனிடையே அவரை தாக்கிய கும்பல் யார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முன்னதாக மாணவன் சின்னதுரையிடம் விசாரித்த போது, இணையதள செயலி மூலமாக நண்பர் ஒருவர் அறிமுகமாகி இருந்தார். அவர் திருமண பத்திரிகை கொடுக்க வேண்டும் என்று தன்னை அழைத்ததாகவும், அதன்படி அப்பகுதிக்கு சென்றதாகவும் அங்கு திடீரென வந்த கும்பல் தன்னை தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் பி.என்.எஸ். 309(பி) காயத்தை ஏற்படுத்தி சொத்துக்களை வழிப்பறி செய்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவ தொடர்பாக 4 பேர் கொண்ட மர்ம கும்பலை பிடிப்பதற்கு 2 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Read More
Tamilசெய்திகள்

இந்தி மூன்றாவது மொழியாக கட்டாயம் – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

மகாராஷ்டிராவில் 1-5 வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் 3 ஆவது மொழியாக இந்தி மொழி கட்டாயம் கற்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிராவில் புதிய கல்வி கொள்கையை பாஜக கூட்டணி அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்மூலம் மராத்தி, ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் 3 ஆவது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை படி அனைத்து ஆசிரியர்களும் பயிற்றுவிக்கப்படுவார்கள் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகமுள்ள மகாராஷ்டிராவில் இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More
Tamilசெய்திகள்

நில அபகரிப்பு வழக்கு – அமைச்சர் மா.சுப்பிரமணியை ஆஜராகும்படி நீதிமன்றம் நோட்டீஸ்

அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலணியில் உள்ள கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சிட்கோ நிலத்தை சென்னை மேயராக இருந்த போது மா.சுப்பிரமணியன், தனது அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவியின் பெயருக்கு மாற்றம் செய்ததாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலி ஆவணங்கள் தயாரித்துதல், ஏமாற்றுதல், கூட்டுச்சதி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு காவல்துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன்பு நிலுவையில் உள்ளது. இதனிடையே, தன் மீதான வழக்கை ரத்துச் செய்யக்கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், நிலஅபகரிப்பு வழக்கு இன்று மீண்டும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றம் அவரது மனைவி காஞ்சனா இருவரும் ஆஜராகவில்லை. அப்போது மா.சுப்பிரமணியன் கூட்டம் நடப்பதால் இன்று விசாணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றச்சாட்டு பதிவுக்காக மா. சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா இருவரும் மே மாதம் 6-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளார். மேலும் அன்றைய தினம் இருவருக்கும் எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என நீதிபதி ஜெயவேல் தெரிவித்தார்.

Read More
Tamilசெய்திகள்

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி குறித்து கேள்வியே கேட்க வேண்டாம் – நயினார் நாகேந்திரன்

தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், பா.ஜ.க. மாநில தலைவர்

Read More
Tamilசெய்திகள்

நயினார் நாகேந்திரனை வருங்கால முதல்வர் என்று குற்ப்பிட்டு ஒட்டிய போஸ்டாரால் பரபரப்பு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளது. இதனை கடந்த வாரம் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிப்படுத்தினார். அப்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்றும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் அமித்ஷா தெரிவித்தார். இதையடுத்து கூட்டணி ஆட்சி தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தி.மு.க.வை வீழ்த்தவே பா.ஜ.க.வுடன் கைகோர்த்தோம் என்றும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். இதுதற்போது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, நெல்லையில் ‘வருங்கால முதல்வரே’ என பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. பா.ஜ.க. மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் செட்டிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அம்மா S. செல்வகுமார் பெயரில் நெல்லையில் முக்கிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் நெல்லை பா.ஜ.க. நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read More
Tamilசெய்திகள்

கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபும் அலங்கரிப்பு – அமைச்சர் சேகர் பாபுக்கு அண்ணாமலை கண்டனம்

பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திமுக அமைச்சர்களிடையே, முதலமைச்சர் குடும்பத்துக்கு யார் சிறந்த கொத்தடிமையாக இருப்பது என்ற போட்டியில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்து, தொழில் போட்டியில் வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு அவர்கள். கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவினர், காலகாலமாக இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தனது தொழில் போட்டிக்கு, இந்து சமய அறநிலையத் துறையைப் பயன்படுத்துவதை அமைச்சர் சேகர்பாபு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மறைந்த தனது தலைவர் மீது அத்தனை பாசம் என்றால், அமைச்சர் சேகர்பாபு, தனது வீட்டு பூஜையறையில் அவரது புகைப்படத்தை வைத்து வணங்கட்டும். நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.

Read More
Tamilசெய்திகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கணவர் மனைவியை சுட்டு தானும் தற்கொலை!

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ரியல் எஸ்டேட் டீலர் ஒருவர் தனது மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குல்தீப் தியாகி (46) தனது வீட்டில் துப்பாக்கியால் மனைவியை சுட்டுக்கொன்று விட்டு, பிறகு தன்னையும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் நடக்கும் வீட்டில் இருந்த அவரது 2 மகன்களும் துப்பாக்கி சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்தனர், பின்னர் அம்மா, அப்பாவை அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அனால் ஏற்கனேவே இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குல்தீப்பின் அறையில் இருந்து ஒரு தற்கொலை கடிதத்த்தை போலீசார் கண்டிபிடித்தனர். அக்கடிதத்தில், “நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளேன், என் குடும்பத்தினருக்கு இது பற்றித் தெரியாது. என்னால் நீண்ட நாட்கள் வாழ முடியாது. என் மருத்துவ சிகிச்சைக்காக பணம் வீணடிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. நானும் என் மனைவியும் எப்போதும் ஒன்றாக இருப்போம் என்று சபதம் செய்துள்ளதால், என் மனைவியை என்னுடன் அழைத்துச் செல்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு” என்று குல்தீப் எழுதியுள்ளார். துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Read More
Tamilசெய்திகள்

தீரன் சின்னமலையின் தியாகத்தை நினை கூர்ந்து, போற்றி வணங்குகின்றேன் – த.வெ.க தலைவ விஜய்

மாவீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் தலைவர்கள் பலர், கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் தீரன் சின்னமலையின் வீரத்தை போற்றியும் வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தாய் மண்ணை மீட்க, தனது அசாத்திய வீரத்தால் அந்நிய ஆதிக்கத்தை வென்றெடுத்த மாவீரர். இறுதி மூச்சுவரை விடுதலைக்காகப் போராடி, துணிச்சலோடு தூக்குமேடை ஏறி, விடுதலை வேட்கையை விதைத்த தீரர், மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த நாளில், அவரின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவரைப் போற்றி வணங்குகின்றேன் என்று கூறியுள்ளார்.

Read More
Tamilசெய்திகள்

டிடிவி தினகரன் – எடப்பாடி பழனிசாமி பேச்சுகளில் திடீர் மாற்றம்!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் அ.தி.மு.க.வில் ஒன்றாக இருந்தவர்கள்தான். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சிக்குள் எழுந்த நீயா? நானா? போட்டியால் எல்லோரும் ஆளுக்கொரு திசையில் சென்றார்கள். கட்சி எடப்பாடி பழனிசாமி வசமானது. இனி நமக்கு அங்கு சரிப்பட்டு வராது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார் டி.டி.வி. தினகரன். அ.தி.மு.க. உரிமை மீட்பு குழு என்று தனிக் குழுவாக செயல்படத் தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம். சசிகலாவோ எப்படியாவது அ.தி.மு.க. பக்கம் போக வேண்டும் என்ற முடிவோடு கட்சியை ஒன்றுபடுத்தப் போகிறேன் என்று புறப்பட்டார். ஆனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்க பா.ஜ.க. மேற்கொண்ட முயற்சிகளும் கடந்த பாராளுமன்ற தேர்தல் வரை கை கொடுக்க வில்லை. இந்த நிலையில் தான் வரப்போகும் 2026 சட்ட மன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணி வெற்றிக்கு தலைவர்கள் ஒன்றிணையா விட்டாலும் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம் என்பதை அமித்ஷா அனைத்து தலைவர்களிடமும் தனித்தனியாக போனில் உரையாடி விளக்கினார். கோபதாபங்களை ஒதுக்கி வைத்து விட்டு தேர்தலில் வெற்றி பெற, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட ஏற்ற சூழ்நிலையை உருவாக்குங்கள் என்று கேட்டுக் கொண்டு உள்ளார். இந்த சமரச யோசனைகள் தலைவர்களிடையேயும் வேலை செய்யத் தொடங்கி இருக்கிறது. அ.தி.மு.க.வின் கொடி, ஜெயலலிதாவின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என டி.டி.வி.தினகரனுக்கு தடை விதிக்கக் கோரியும், அ.தி.மு.க. கொடி போல அ.ம.மு.க. கொடியை வடிவமைத்ததற்காக ரூ.25 லட்சம் இழப்பீடு கோரியும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமியும் சென்னை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 2019-ம் ஆண்டு உரிமையியல் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் நீதிபதி ஆர்.கே.பி.தமிழரசி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அ.தி.மு.க. பொதுச் செலாளர் என்ற முறையில் பழனிசாமி, இந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அவரது தரப்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்து மனுதாக்கல் செய்தார். அதற்கு டி.டி.வி.தினகரன் தரப்பில் ஆஜரான வக்கீலும் ஒப்புதல் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, டி.டி.வி.தினகரனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்தார். தினகரன் மீதான வழக்கை வாபஸ் பெற எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதே போல் டி.டி.வி. தினகரனின் பேச்சிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் நேற்று அளித்த பேட் டியில் தி.மு.க.வை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணி இன்னும் வலுப்பட வேண்டும். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒரே கூட்டணியில் இணைந்து செயல் பட வேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகிறேன். அதுதான் இப்போது நடந்து வருகிறது. கூட்டணியில் எல்லோரையும் அனுசரித்து செல்வோம். 2021 வரை பா.ஜனதா கூட்டணியில் இருந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப தேர்தல் நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு பேசி விடுவார்கள். தமிழ்நாட்டு மக்கள் நலன் கருதி, கட்சியை அழிந்து விடாமல் பாதுகாக்க இந்த முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்ட ணியை பொறுத்தவரை அனைத்து கட்சிகளின் நிலைப்பாடும் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பது தான் என்று கூறி உள்ளார். ஒரே கூட்டணியில் அணி வகுத்து இருக்கும் சூழ்நிலையில் இருவரின் பேச்சிலும் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களால் அடுத்து என்ன என்று தொண்டர்களை யோசிக்க வைத்துள்ளது.

Read More
Tamilசெய்திகள்

தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார்

தமிழக வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி, நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் பெண்கள் மற்றும் இந்து மதம் குறித்து பேசியது சர்ச்சையாகியிருந்தது. இதற்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பொன்முடியை துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார். ஆனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தோ, அமைச்சர் பதவியில் இருந்தோ நீக்கவில்லை. பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஆளுநரை சந்திக்கிறார். அப்போது பொன்முடியை அமைச்சர் பதவியில் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More