Tamilசினிமா

இந்தியில் ரீ மேக்காகும் ‘பரியேறும் பெருமாள்’

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் பரியேறும் பெருமாள்.சாதிய கொடுமைகளையும் அது எவ்வாறு மறைமுகமாக செயல்படுகிறது என்பதையும் ஒரு கல்லூரி காதல் கதை மூலம் அப்பட்டமாக கூறியிருப்பார் மாரி செல்வராஜ்.

பின் நாட்களில் கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் மூலம் கூர்மையான சமூக அரசியல் கருத்துக்களை கூறுவதற்கு பரியேறும் பெருமாள் பிள்ளையார் சுழி என்றே சொல்லலாம். கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் நடித்த இப்படம் தமிழ் சினிமாவின் சமீபத்திய படங்களில் தவிர்க்க முடியாத கிளாசிக் படமாக மாறியது. இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்தின் இந்தி ரீமேக் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஹிந்தியில் சாசங் கஹைதன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘தடக்’ திரைப்படம் இளம் காதலர்களை சமூக வேறுபாடுகள் எவ்வாறு சேர விடாமல் தடுக்கிறது என்று பேசியிருக்கும். பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் இந்த படத்தை தயாரித்திருந்தார். பரியேறும் பெருமாள் படத்தில் கதைக்களத்துடன் ஒத்துப்போவதால் ‘தடக்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘தடக் 2’ என்ற பெயரில் பரியேறும் பெருமாள் படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது என்ற அறிவிப்பை கரண் ஜோகர் வெளியிட்டுள்ளார்.