Tamilசெய்திகள்

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 75 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் – ரெயில்வே துறை அமைச்சர் தகவல்

பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 97 கோடி ரூபாயில் அதிநவீன விரைவு ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த அதிவேக ரெயிலுக்கு, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது புதுடெல்லி – வாரணாசி, புதுடெல்லி – வைஷ்ணோ தேவி இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயிலில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு சென்னை ஐ.சி.எப்.,பில் நடந்து வந்த தயாரிப்பு பணிகள் முடிந்து சோதனை ஓட்டத்திற்கு தயாராக உள்ளது.

இந்நிலையில், வந்தே பாரத் ரெயிலில் இறுதிக்கட்ட ஆய்வு மேற்கொள்ள மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஐ.சி.எப்., வந்தார். அங்குள்ள பணியாளர்களிடம் தமிழில் நலம் விசாரித்த அவர், சோதனை ஓட்டத்திற்கு தயாராகவுள்ள புதிய வந்தே பாரத் ரெயிலில் ஏறி பார்வையிட்டார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் தருணத்தில் வரும் 2023 ஆகஸ்டுக்குள், 75 வந்தே பாரத் ரெயில்களை நாடு முழுதும் இயக்க ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.