Tamilசெய்திகள்

அண்ணாமலையிடம் வழங்கிய புகார்களை ஆய்வு செய்ய 30 பேர் கொண்ட குழு அமைப்பு

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது பாத யாத்திரையின் முதல்கட்டமாக ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு சென்றார். இந்த யாத்திரையின் போது பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெறுவதற்காக புகார் பெட்டிகளும் கொண்டு செல்லப்பட்டன. அப்போது 1000-க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் வந்துள்ளன. அந்த மனுக்களை ஆய்வு செய்யும் பணியில் 30 பேர் ஈடுபட்டு உள்ளார்கள்.

இந்த குழுவினர் மனுவை பார்த்து சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டு விசாரித்து தேவைப்படும் கூடுதல் ஆவணங்களையும் கேட்டு பெற்று வருகிறார்கள். உண்மை தன்மை இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படுகிறது. இந்த ஆய்வு முடிந்ததும் தகுதியான மனுக்கள் கட்சியின் சம்பந்தப்பட்ட பிரிவு அணிகள் மூலம் அரசின் துறைகளிடம் வழங்கப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

2-ம் கட்ட பாத யாத்திரை அடுத்த மாதம் 2-ந்தேதி தேனியில் தொடங்குகிறது. 3-ம் கட்ட பாத யாத்திரை அக்டோபர் மாதம் திருப்பூரில் தொடங்கி தஞ்சாவூரில் நிறைவடைகிறது.