Tamilசெய்திகள்

அண்ணாமலையின் ஈரோடு மாவட்ட 2 நாட்கள் சுற்றுப்பயணம் இன்று தொடங்குகிறது

தமிழக பா.ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று மக்களை சந்தித்து பேசி வருகிறார். அதன்படி ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பவானிசாகர், கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கடந்த வாரம் அண்ணாமலை நடைபயணம் செய்தார்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் அண்ணாமலை 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அதன்படி இன்று (புதன்கிழமை) மதியம் 4 மணிக்கு மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து நடைபயணத்தை அண்ணாமலை தொடங்குகிறார்.

சிவகிரி குமரன் சிலை பகுதியில் மக்கள் மத்தியில் அண்ணாமலை பேசுகிறார். இதைத் தொடர்ந்து பெருந்துறை-குன்னத்தூர் ரோட்டில் மாலை 6 மணிக்கு மீண்டும் நடைபயணத்தை அண்ணாமலை தொடங்குகிறார். தொடர்ந்து அண்ணா சிலை பகுதியில் அவர் மக்கள் மத்தியில் பேசுகிறார்.

ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தொகுதிகளுக்கான சுற்றுப்பயணம் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. நாளை மாலை வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் மாலை 5 மணிக்கு அண்ணாமலை நடைபயணத்தை தொடங்குகிறார். தொடர்ந்து சூரம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் அண்ணாமலை பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.