Tamilசெய்திகள்

அண்ணாமலையின் மேட்டுப்பாளையம் நடைபயணம் ஒத்திவைப்பு

தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நாளை மேட்டுப்பாளையத்தில் நடைபயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவரது மேட்டுப்பாளையம் நடைபயண நிகழ்ச்சி அக்டோபர் 4-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

நாளை மிலாது நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாளை மேட்டுப்பாளையத்தில் மிலாது நபி ஊர்வலம் நடக்க உள்ளது. அன்றைய தினம் நாமும் நடைபயணம் மேற்கொண்டால் போக்குவரத்து இடையூறு ஏற்படும் என கட்சி நிர்வாகிகளும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்று “என் மண், என் மக்கள்” யாத்திரை நடைபயணம் அக்டோபர் 4-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் மக்களை சந்திக்க ஆவலுடன் உள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.