Tamilசெய்திகள்

அமெரிக்கா மற்றும் உலக வங்கியிடம் இருந்து கூடுதலாக 1.7 பில்லியன் டாலர் பெற்ற உக்ரைன்

உக்ரைன் மீது ரஷியா 139-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ரஷியாவை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் உக்ரைனில் இருந்து பல மருத்துவ ஊழியர்கள் வெளியேறிய நிலையில், சில மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ள்ன. மற்ற மருத்துவமனைகள் குண்டுவீசி தாக்கப்பட்டுள்ளன.

உக்ரைனில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் வேலையைச் செய்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்கா மற்றும் உலக வங்கியிடமிருந்து கூடுதலாக 1.7 பில்லியன் டாலர் நிதி உதவியை உக்ரைன் பெற்றுள்ளது. இந்த நிதியின் மூலம் பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக, உக்ரைன் சுகாதார மந்திரி கூறுகையில், போரின் பெரும் சுமை காரணமாக ஒவ்வொரு மாதமும் சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது மிகவும் கடினமாகி வருகிறது. 1.7 பில்லியன் டாலர் என்பது மற்றொரு நிதி உதவி மட்டுமல்ல, இது ஒரு முதலீடாகும். இது எங்களை வெற்றிக்கு ஒரு படி நெருங்க வைக்கிறது என தெரிவித்தார்.