Tamilசெய்திகள்

அம்மா கிளினிக் டாக்டர்கள், ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கியது மகிழ்ச்சி – டாக்டர்.ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:-

கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் மற்றும் பன்நோக்கு மருத்துவப் பணியாளர்களை மீண்டும் பணிக்கு வரும்படி சுகாதாரத்துறை அழைத்திருப்பது வரவேற்கத்தக்கது. இது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும்!

மருத்துவர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அதற்கு எதிராக மருத்துவப் பணியாளர்கள் போராடி வருவதை சுட்டிக்காட்டி, அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கும்படியும் நேற்று வலியுறுத்தியிருந்தேன். ஒரே நாளில் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது!

மருத்துவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கும் தீர்வு தற்காலிகமானதாக இருக்கக்கூடாது.  அனைத்து அம்மா கிளினிக் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்தி அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.