Tamilசெய்திகள்

அயோத்தி ராமர் கோவிலில் ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், ஐந்து வயது பாலகனாய் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

நேற்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது. காலை 6 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. ஆனால், முதல்நாள் சூரிய உதயத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் காலை 3 மணி முதல் கோவிலில் குவியத் தொடங்கினர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

ஆறு மணிக்கு நடை திறந்ததும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இரவு 10 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையிலும் எந்தவித அசாம்பாவிதம் நடைபெறாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

நேற்று முதல் நாளில் மட்டும் ஐந்து லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து பக்கதர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிகக்ப்படுவார்கள். பக்தர்கள் அமைதி காத்து ஒத்துழைப்பு வழங்குமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இன்று 2-வது நாளாகவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது.