Tamilசெய்திகள்

அரசு உதவிகள் மக்களுக்கு வராமல் உள்ளது – அண்ணாமலை பேச்சு

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் சென்னை மாநகராட்சி 15-வது மண்டலம் 198-வது வார்டுக்கு உட்பட்ட காரப்பாக்கம் பகுதியில் 5000 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி 198-வது வார்டு மாமன்ற உறுப்பினரும் ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவருமான லியோ என்.சுந்தரம் ஏற்பாட்டில் காரப்பாக்கம் கங்கையம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு 5000 பேருக்கு அரிசி, பருப்பு, பால் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:-

மக்கள் கஷ்டத்தில் இருக்கும்போது பாரதிய ஜனதா தொண்டர்கள் முன்வந்து மக்களுக்கு உதவி செய்கின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசு அதிகாரிகள் எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்கள் மக்கள் பிரதிநிதிகள் நேரில் வந்து மக்களை சந்திக்க வேண்டும். அப்போதுதான் இங்கு என்ன நடக்கிறது என தெரியும். சென்னையில் உள்ள மையப் பகுதியை விட புறநகர் பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை மைய பகுதியை மட்டும் முதலமைச்சர் பார்வையிடுகிறார். அரசு உதவிகள் மக்களுக்கு வராமல் உள்ளது. அதனால்தான் அந்தப் பொறுப்பை நாங்கள் கையில் எடுத்து செய்து வருகிறோம். பாதிக்கப்பட்ட பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது என கூறுவதால் தான் மக்கள் ஆத்திரமடைந்து மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

அமைச்சர் கே.என்.நேரு நான்கு மாதங்களுக்கு முன்பு 98 சதவீதம் வடிகால் பணிகள் முடிந்து விட்டதாக கூறினார். நேற்று அவர் கூறிய கருத்தின் படி 42 சதவீதம் தான் வடிகால் பணிகள் முடிவடைந்துள்ளது. ஒரு பொறுப்புள்ள மூத்த அமைச்சர் இது போன்று மாற்றி மாற்றி பேசுகிறார். அரசே பொய் சொல்ல ஆரம்பித்தால் மக்கள் யாரை நம்புவார்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சென்னை மக்கள் பொறுமையாக இருப்பார்கள் என்று நேற்று கே.என்.நேரு பேசிய பேச்சால் மக்கள் சாலைக்கு வந்து எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களை கேள்வி கேட்டு மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

மத்திய அரசு ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு கொடுத்த நிதி எங்கே போனது என தெரியவில்லை. எத்தனை நாளைக்கு மத்திய அரசை குறை சொல்லி குறை சொல்லி வண்டியை ஓட்டுவார்கள். மக்களே சாலைக்கு வந்து மத்திய அரசு இதுவரை கொடுத்த நிதி எங்கே போனது என தெரியவில்லை. எத்தனை நாளைக்கு மத்திய அரசை குறை சொல்லி குறை சொல்லி வண்டியை ஓட்டுவார்கள். மக்களே சாலைக்கு வந்து மத்திய அரசு இதுவரை கொடுத்த நிதி எங்கே என்று கேள்வி கேட்கின்றனர். அதற்கே இவர்களால் கணக்கு கொடுக்க முடியவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.