Tamilவிளையாட்டு

அறிமுக டெஸ் போட்டியில் சதம் அடித்த ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி

வெஸ்ட் இன்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் தொடக்க வீரராக களம் இறங்கிய புதுமுக வீரர் ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். அவர் 143 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் களத்தில் உள்ளார்.

அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்த 17-வது இந்திய வீரர் ஆவார். மேலும் அறிமுக டெஸ்டில் தொடக்க வீரராக அடித்த 3-வது இந்திய வீரர், ஜெய்ஸ்வால் ஆவார். வெளிநாட்டு மண்ணில் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 5-வது இந்திய வீரர்.

அவருக்கு கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் உள்பட ஏராளமான வீரர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நேற்றைய ஆட்டத்துக்கு பிறகு ஜெய்ஸ்வால் கூறியதாவது:-

சதம் அடித்த தருணம் எனக்கு உணர்ச்சிகரமாக இருந்தது. இது எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகவும் உணர்ச்சிகரமானது. என்னை பற்றி நான் பெருமைப்படுகிறேன். இந்திய அணியில் வாய்ப்புகளை பெறுவது கடினம். எந்த வகையிலும் என்னை ஆதரித்த, உதவிய அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். இதை என் தாய்-தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன்.

அவர்கள் நிறைய பங்களித்திருக்கிறார்கள். கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் இப்போது அதிகம் சொல்லமாட்டேன். இது ஒரு தொடக்கம். நான் நிறைய செய்ய வேண்டும்.

ஆடுகளம் மெதுவாக உள்ளது. அவுட் பீல்டும் மிகவும் மெதுவாக உள்ளது. அது கடினமாகவும் சவாலாகவும் இருந்தது. அதை எதிர்கொண்டு ரன்களை எனது நாட்டுக்காக குவிக்க விரும்பினேன். பந்துக்கு பந்து விளையாடி எனது கிரிக்கெட்டை ரசிக்க விரும்புகிறேன். இந்த சவாலை எதிர்கொள்ள விரும்புகிறேன். எல்லாவற்றிலும் நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.