Tamilவிளையாட்டு

அழுத்தம் இருந்தால் ஐ.பி.எல் போட்டியில் விளையாடாதீர்கள் – கபில் தேவ் காட்டம்

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

உலகக்கோப்பைக்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. வேகப்பந்து வீரர் பும்ரா, ஆல் ரவுண்டர் ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக 20 ஓவர் உலகக்கோப்பையில் ஆடவில்லை. முன்னணி வீரர்களான இருவரும் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. உலகக்கோப்பைக்கான மாற்று வீரர்கள் பட்டியலில் இருந்த தீபக் சாஹரும் காயம் அடைந்துள்ளார். அதிகமான போட்டிகளில் விளையாடுவதால் வீரர்கள் காயத்தில் சிக்குவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதிக அழுத்தம் இருப்பதாக உணரும் வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாட வேண்டாம் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதால் அழுத்தம் இருப்பதாக ஒரு சில புகார் உள்ளது. அதனை சிலர் வெளிப்படையாக தொலைக்காட்சியில் சொல்லி நான் பார்த்து உள்ளேன். இதனால் அவர்களுக்கு இதனை சொல்லிக்கொள்கிறேன். ஐ.பி.எல்.லில் ஆடுவதால் வீரர்கள் மீது அதிக அழுத்தம் இருப்பதாக சொல்கிறார்கள். அழுத்தமாக உணர்ந்ததால் வீரர்கள் ஐ.பி.எல்.லில் விளையாட வேண்டாம் என்று நான் சொல்லிக்கொள்கிறேன்.
வீரர்கள் கிரிக்கெட்டை ரசித்து ஆடினால் அழுத்தம் இருக்காது. மன அளவிலான சோர்வு குறித்து என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் ஒரு விவசாயி. ஆனால் விளையாட்டை ரசித்து மிகவும் அனுபவித்து ஆடினேன். கிரிக்கெட் அழுத்தம் இருப்பதாக நான் உணர்ந்தது இல்லை. வீரர்களும் விளையாட்டை ரசித்து ஆடினால் அழுத்தம் எதுவும் இருக்காது.

இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.