Tamilவிளையாட்டு

ஆசிய கிரிக்கெட் தொடர் – இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வங்காளதேசம் வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்4 சுற்றில் நேற்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் இந்தியா, வங்காளதேச அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வங்காளதேசம் 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 265 ரன்களை எடுத்துள்ளது.

கேப்டன் ஷகிப் அல் ஹசன் 80 ரன்னும், தௌஹித் ரிடோய் 54 ரன்னும், நசும் அகமது 44 ரன்னும் எடுத்தனர். இந்தியா சார்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோகித் சர்மா டக் அவுட்டானார். திலக் வர்மா 5 ரன்னிலும், இஷான் கிஷன் 5 ரன்னிலும், கே.எல்.ராகுல் 19 ரன்னிலும் அவுட்டாகினர்.

சூர்யகுமார் யாதவ் 26 ரன்னும், ஜடேஜா 7 ரன்னிலும் வெளியேறினர். தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.அவர் 121 ரன்னில் ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்சர், 8 பவுண்டரிகள் அடங்கும். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய அக்சர் படேல் 42 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.

இறுதியில், இந்திய அணி 259 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் ஆறுதல் வெற்றி பெற்றது. வங்காளதேசம் சார்பில் முஸ்தபிர் ரகுமான் 3 விக்கெட்டும், மெஹதி ஹசன், தன்சிம் ஹசன் சாகிப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.