Tamilவிளையாட்டு

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி – பாகிஸ்தான் அணி சென்னை வந்தது

ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வரும் 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடக்கிறது.

இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, சீனா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் இந்த சர்வதேச ஹாக்கி போட்டிக்காக எழும்பூர் ஸ்டேடியம் நவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் புதுப்பொலிவு பெற்றுள்ளது. போட்டிக்கான இறுதி கட்ட ஆயத்த பணிகளை போட்டி அமைப்பாளர்கள் தடபுடலாக செய்து வருகின்றனர்.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்களை தயார்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்க முதல் அணியாக மலேசியா கடந்த சனிக்கிழமை சென்னை வந்தது.

இதைத்தொடர்ந்து தென்கொரியா, ஜப்பான் அணிகளும் சென்னை வந்தடைந்தன. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் விமானம் மூலம் பாகிஸ்தான் அணி சென்னை வந்தடைந்தது. அவர்களுக்கு எஸ்.டி.ஏ.டி., ஹாக்கி இந்தியா சார்பில் உற்சாமான வரவேற்பு அளிக்கப்பட்டது.