Tamilவிளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டி – வங்காளதேசம் வெற்றி

வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. ஒருநாள் தொடரின் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 48.5 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஷகிப் அல் ஹசன் 75 ரன், முஷ்பிகுர் ரஹீம் 70 ரன், ஷாண்டோ 53 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும், சாம் கர்ரன், அடில் ரஷித் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 247 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஆனால் வங்காளதேச அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இறுதியில், இங்கிலாந்து அணி 43.1 ஓவரில் 196 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஜேம்ஸ் வின்ஸ் 38 ரன்னும், பிலிப் சால் 35 ரன்னும், கிறிஸ் வோக்ஸ் 34 ரன்னும் எடுத்தனர். இதன்மூலம் வங்காளதேச அணி 50 ரன் வித்தியாசத்தில் வென்று ஆறுதல் வெற்றியை தேடிக்கொண்டது. வங்காளதேச அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்டும், தைஜூல் இஸ்லாம், எபடாட் ஹோசைன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இப்போட்டியில் தோற்றாலும் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது.