Tamilவிளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான 5 வது டெஸ்ட் போட்டி – இங்கிலாந்து வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தது

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் 4 போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளிலும் இங்கிலாந்து 1 போட்டியிலும் வென்று இருந்தது. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்தது. கடந்த ஆண்டு கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட 5-வது போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடத்தப்பட்டது.

5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே விட்டு கொடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 378 ரன்களை சேசிங் செய்ததன் மூலம் சாதனை ஒன்றை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2019-ம் ஆண்டு 359 ரன்களை சேசிங் செய்ததே அதிகபட்ச ரன்னாக இருந்தது. இந்தியாவுக்கு எதிராக 378 ரன்களை சேசிங் செய்ததன் மூலம் இந்த சாதனையை முறியடித்துள்ளது. அதற்கு முன்பு 1928-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 332 ரன்கள் சேசிங் செய்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் இருவரின் கூட்டணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இருவரின் கூட்டணியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை 3-0 என தொடரை கைப்பற்றியது. அதை தொடர்ந்து இந்திய அணியையும் அபாரமாக வென்றுள்ளது. எங்களது அதிரடியான அணுகுமுறையை கண்டு இனி எதிரணியினர் பயப்படுவார்கள் என பென் ஸ்டோக்ஸ் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.