Tamilவிளையாட்டு

இந்திய அணியில் அறிமுகமாகும் சர்பராஸ் கான் – ஆனந்த கண்ணீர் வடித்த தந்தை

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் சர்பராஸ் கான் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். இந்திய அணியில் அறிமுகமாகும் 311-வது வீரர் இவராவார். அவருக்கு இந்திய அணியின் தொப்பியை அனில் கும்ப்ளே வழங்கினார்.

இந்த போட்டியை காண சர்பராஸ் கான் தந்தை மற்றும் அவரது மனைவி ஆகியோர் வந்திருந்தனர். சர்பராஸ் கான் இந்திய அணியின் தொப்பியை பெற்றுக் கொண்டதும் அவரது தந்தை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தார். அதேபோல் சர்பராஸ் கான் மனைவியும் ஆனந்த கண்ணீர் வடித்தார். மனைவின் கண்ணீரை துடைத்து விட்டு சர்பராஸ் கான் போட்டிக்கு தயாரானார்.

உள்ளூர் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் கானுக்கு இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என தொடர்ந்து கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், இந்த அணியில் அவர் இடம்பிடிக்க போராடி வந்தார்.

இந்த நிலையில்தான் தற்போது ராஜ்கோட் டெஸ்டில் இருந்து ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல் ஆகியோர் விலகிய நிலையில் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சர்பராஸ் கான் 45 முதல்தர போட்டிகளில் விளையாடி 69.85 சராசரி வைத்துள்ளார். 26 வயதாகும் சர்பராஸ் கான் 45 முதல்தர போட்டிகளில் 14 சதம், 11 அரைசதங்கள் அடித்துள்ளார். 301 நாட்அவுட் அதிகபட்ச ஸ்கோராகும்.